

உலகின் மிகவும் விலை உயர்ந்த பிரியாணி ரூ.19,688
23 கேரட் தங்கத்துடன் துபாயில் உள்ள ஒரு ஓட்டலில் உலகின் மிகவும் விலை உயர்ந்த பிரியாணி பரிமாறப்படுகிறது. இதன் விலை ரூ.19,688 ஆயிரமாகும்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் உள்ள பாம்பே பாரோ உணவகத்தில் தான் அந்த விலை உயர்ந்த பிரியாணி பரிமாரப்படுகிறது. தி ராயல் கோல்ட் பிரியாணி என்று கூறப்படும் அந்த பிரியாணியில் ”23 கேரட்” உட்கொள்ளக் கூடிய தங்கம் வைக்கப்பட்டுள்ளது. இதனால்தான் பிரியாணி அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
அமீரகத்தின் கரன்சியில் 1000 திராம்கள் (ஒரு திராமின் மதிப்பு ரூ.19.68) இதற்கு விலை நிர்ணயித்துள்ளனர். இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.19,688 ஆகும். பிரியாணியில் பரிமாறப்படும் 23 கேரட் தங்கமானது இலை வடிவில் மிகவும் மெல்லியதாக மாற்றப்பட்டு உணவுக்கு மேலே அலங்காரமாக வைக்கப்படுகிறது.
பிரியாணியின் மேலே சாப்பிடக்கூடிய வகையிலான 23 கேரட் தங்க இலை, சிக்கன் கபாப், குங்குமப்பூ போட்டு சமைக்கப்பட்ட சாதம், காஷ்மீரின் செம்மறி ஆட்டுக்கறி கபாப், டெல்லியின் புகழ் பெற்ற செம்மறி ஆட்டு சாப்ஸ், ரஜபுத்திரர்களின் சிக்கன் கபாப், முகலாயர்கள் ஸ்டைல் கோப்தா, மலாய் சிக்கன் ரோஸ்ட் போன்றவை இந்த இந்த ராயல் கோல்ட் பிரியாணி தட்டில் இடம் பெற்றுள்ளன.
இந்த பாம்பே பாரோ ஓட்டலானது துபாய் இன்டர்நேஷனல் பைனான்சியல் சென்டரில் (டிஐஎப்சி) அமைந்துள்ளது. இந்த ராயல் பிரியாணியை ருசிக்க ஏகப்பட்ட நபர்கள் ஓட்டலுக்கு வருகை தரத்தொடங்கியுள்ளனராம். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன.
News Comments